Monday, September 13, 2010

ஒளவை.


நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே – (187)

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று கூறப்பட்ட உரைக்கு மாற்றுக்கருத்தாக தமிழண்ணல் எழுதி சாகித்ய அகாதெமி பதிப்பான ஒளவையார் நூலிலிருந்து.

நாடோ, காடோ, பள்ளமோ, மேடோ எதுவானாலும் அவற்றால் எல்லாம் நிலம் நல்லது, கெட்டது ஆவதில்லை. எங்கு ஆடவர்கள் நல்லவர்களாக உள்ளனரோ, அங்கு நிலனே நீயும் நல்லை! வாழிய!

இயற்கையால் நன்மைதான் விளையும். பெண்களாலும் உலகிற்கு நன்மையே உளதாகும். தம்மையும் கெடுத்துக்கொண்டு, பிறரையும் கெடுப்பவர்கள் ஆடவர்களே. அதனால் ஆடவர் நல்லவராய் இருந்தால் உலகம் நல்லதாக இருக்கும், அவர்கள் கெட்டவர்களானால் உலகமும் கெட்டழியும் !

இதற்கு ’மக்கள்’ எனப் பொதுவாகப் பொருள் கொண்டு, எங்கே மக்கள் நல்லவரோ அங்கே உலகமும் நல்லதாக இருக்கும் என பொருள் கொள்ளலாம். ஆயினும், பாடலில் ஆளும் உரிமையைக் கையில் எடுத்துக்கொண்டு வலிமையால் ஆட்டிப்படைக்கும் ஆடவரையே, அவர் நயமாக இடித்துப் பேசுகிறார்.

ஆடவர் என்பதற்கு வல்லமையுடையோர்- வெற்றியை ஆளும் திறனுடையோர்- என்று கொண்டால், காரணப்பெயராய் இரு சாராரிலும் தலைமை தாங்குவோரைக் குறிக்க வாய்ப்புள்ளது. ஒரு நாடு சிறந்த நாடென பெயர் பெறுவதற்கு, மக்களுக்கு வழிக்காட்டவல்ல காரணம் எனக் கருதலாம். எங்கனமாயினும் உலகளாவிய கருத்தரங்கொன்று வைத்துப் பலர் கூடி விவாதிப்பதற்குரிய ’செய்தியை’ ஒளவையார் நான்கே அடிகளில் கூறிச்சென்றுள்ளார்.

No comments:

Post a Comment